"உங்க டூத்பேஸ்ட்லே உப்பு இருக்கா?"
"உங்க டூத்பேஸ்ட்லே உப்பு இருக்கா?"
லாக்டௌனால் முடங்கிய எனக்கு தஞ்சம் கொடுத்தது டிவி மற்றும்
இணையதள செனல்கள்.
முதலிரு
வாரங்களில் கொரனோ செய்திகளில் சஞ்சாரித்தேன். அங்கே ஒரே ஓலம்! பயம் கலந்த
சலிப்பால் உந்தப்பட்டு டிவி சீரியல்களை நோக்கி நகர்ந்தேன். ஆனால்,
சில நாட்களிலேயே
படப்பிடிப்பு நின்றதால், எவனையும் எமனையும் விஞ்சி சாசுவதம் பெற்ற சீரியல்களும் சட்டென நின்றன, எல்லாம் வல்ல
கொரோனவால்.
அப்புறம்
டிவியில் சினிமாபடங்களை,
செனல் மாற்றி மாற்றி
பார்த்தேன் - சில நல்ல படங்கள்;
பல மொக்க படங்கள். பாத்து பாத்து போர் அடித்தது.
படங்களைவிட
இடையிடையே வந்த விளம்பரங்கள் என்னை ஈர்த்தன - சில நொடி நேரமே வந்து போவதாலோ?
சர்ப்
எக்ஸல் (Surf Excel) குடும்பப்பெண், "மூணு விரலே போதும்",
என்றார் - அப்போ சோப்பே தேவை இல்லையோ என்ற சந்தேகம் உங்களுக்கு
வரக்கூடாது.
இன்னொரு
சோப்பு விளம்பரம்,
"கறை நல்லது" என்றது. "யாருக்கு?" என வினவக்கூடாது.
சமூகத்தின், மக்களின்
தேவைகள் மாறும்போது, தயாரிப்பாளர்களின் பார்வை அதற்கு ஏற்றாற்போல நுணுக்கமாக
மாறுகிறது. மிக சமீபத்திய ஹமாம் சோப்பு விளம்பரத்தில் அவர்கள் கூறுவதை
கேளுங்கள்,
"வைரஸ்
பரவாமல் தடுக்க ஹமாம் அல்லது இதர ஏதேனும் ஒரு சோப்பை பயன்படுத்துங்கள்", என்கிறார்கள்.
இந்த
கொரோனா பேரிடர் காலத்தில் சோப்பு கம்பெனிகள் எல்லாம் அநியாயத்துக்கு
நல்லார்வர்களாக மாறிவிட்டார்களோ என தோன்றுகிறதா?
அடுத்து, ரயில் பெட்டியில்
திரையை கிழுத்து கொண்டு, மைக் உடன் சமந்தா அக்கினேனி,
பல் நோவு வந்தவரிடம், "உங்க டூத்பேஸ்ட்லே
உப்பு இருக்கா?" என கொஞ்சம் உரிமையுடன் கேட்டார். மிக
முக்கியமாக, உப்பின் ஞானத்தை புகட்டினார். ரயில் பெட்டில்
இருந்த எல்லோரும் "உப்பின் ஞானம்,
உப்பின் ஞானம்", என கோரஸாக பாடினார்கள்.
"ரத்த
கொதிப்பு வந்து, பல வருடங்களாக உப்பை தவிர்த்தெல்லாம் வீணா, கோபால்",
என கேட்க தோன்றியது.
கூடவே, "டூத்பேஸ்ட்லே
உப்பு?" என்றவுடன் சட்டென என் மண்டையில் ஒரு
பொறியும் தட்டியது.
ஏறக்குறைய ஒரு வருடம் முன்பு எங்கள்
கம்பெனியின் விற்பனை பயிற்சி முகாம் நடந்தது. எங்கள் விற்பனை பிரிவை சேர்ந்த
பலரும் பங்குபெற்றோம்.
முகாமின்
தொடக்க உரைக்கு பின், குரு நாத் சாருடைய செஷன். குரு
நாத் சார் மார்க்கெட்டிங்ல் ஜாம்பவான், 30 வருட அனுபவம் எங்க
கம்பெனியில்.
விற்பனை, மார்க்கெட்டிங்
மற்றும் வாடிக்கையாளர்களை கையாளுதல் போன்றவற்றில் உள்ள நுணுக்கங்களை சுவாரசியமாக
எடுத்துரைத்தார். பல கருத்துக்கள் ஆணித்தரமாக இருந்தன. எல்லாம் அனுபவ பாடங்கள்,
தியரி அல்ல; பல்லாண்டுகால சொந்த
அனுபவத்திருந்து சாறாக பிழிந்து கொடுத்தார் குரு நாத்.
குறிப்பாக, வாடிக்கையாளர்களின்
விருப்பங்கள் எப்படி மாறும், அதை நாம் எப்படி அனுசரித்து போகவேண்டும் என்று
விளக்கினார்.
உணவு இடைவேளை போது, தட்டு சேவை (buffet
) வரிசையில் நின்று, தட்டில் உணவு எடுத்து
கொண்டு, என் நண்பர்
சதாசிவம் அமர்ந்து இருந்த டேபிளுக்கு சென்று அவர் அருகில் உட்கார்ந்தேன்.
நிற்க.
இது சமூக விலக்கல் இல்லாத,
மாஸ்க் அணிந்து வாய் மூடாத,
'அந்த' காலம் என்று நினைவில் கொள்க.
சாப்பிடும்
போது, நவீன மற்றும் பண்டைய உணவு பழக்க
வழக்கங்கள் பற்றி பேச்சு வந்தது. சதாசிவம் பாரம்பரிய உணவு மற்றும் மருத்துவம்
மீது அதீத நம்பிக்கை கொண்டவர், நடைமுறையில் முடிந்தவரை
பின்பற்றுவார். அதற்கான முகாம்களிலும் பங்கேற்றுள்ளார்.
"கிருஷ்ணன், கவனித்தீங்களா?
கடந்த சில வருஷங்களாகவே நம் மக்களுக்கு பாரம்பரிய உணவு, பழக்க
வழக்கங்கள் மேல கவனம் வந்திருக்கு",
என சதாசிவம் என்னிடம் ஆர்வமாக சொன்னார்.
நான்
அவரை நிமிர்ந்து பார்க்க, அவர் தொடர்ந்தார்.
"காலையில்
பீச் பக்கம் வாக் போனா,
அங்கே அருக்கம் புல் ஜூஸ் விக்கறாங்க. சங்கீதாவிலே பழைய சோறு மெனுளே
ஏறிடுச்சு - பழைய சோறு தொட்டுக்க பச்ச மொளகா, சின்ன வெங்காயத்தையும்
தரங்க".
சதாசிவம்
உற்சாகமாக தொடர்ந்தார்,
"இந்த ட்ரெண்ட், சாப்பாட்டையும் தாண்டி
போயிட்டு இருக்கு. ஒரு காலத்திலே நம்ம ஆட்கள் பல் தேய்க்க வேப்பம் குச்சி, சாம்பல்,
கரி, உப்பு யூஸ் பண்ணினாங்க. அப்பறம் இவங்க டூத் பேஸ்ட் கொண்டு வந்தவுடன்,
பாரம்பரியத்தை கைவிட்டுவிட்டோம்".
இவங்க என்று அவர் சொன்னது
டூத் பேஸ்ட் தயாரிப்பாளர்களை.
அவர்
மீண்டும் சொன்னது,
"இப்போ, இவங்க எல்லாம் நம்ம வழிக்கே
வந்துட்டாங்க. டூத் பேஸ்ட்லே வேப்பம், உப்பு, கரி போட்டு விக்கறாங்க. கவனிச்சீங்களா?", என்றார்
சதாசிவம் சற்று வெற்றி களிப்புடன்.
எனக்கோ
வேறு ஒரு மாறுபட்ட விளக்கமும்
தென்பட்டது. அதை சொல்லும் முன்
பலரும் எங்கள் டேபிளுக்கு வந்து சேர, அந்த உரையாடல் தடை பட்டது. அதற்குப்பின் இந்த விஷயம்
பேச வாய்ப்பு வரவில்லை.
இப்போ உப்பு விளம்பர விவாகரத்துக்கு
வருவோம்.
சதாசிவம்
சொன்னாற்போல சில வருடங்களாகவே,
நம்மில் பலர், பண்டைய உணவு மற்றும் பழக்க வழக்கங்களின் நன்மைகளை பற்றி பேசுவது
அதிகரித்து உள்ளது. பலர் அவைகளை அனுசரிக்கவும் செய்கிறார்கள். அவைளை பற்றிய விழிப்புணர்வும்
அதிகரித்து உள்ளது.
"உப்பு
பல்லுக்கு நல்லதா, எவ்வளவு நல்லது?", என்று எனக்கு தெரிந்த பல் மருத்துவர் பீனா அவர்களிடம் கேட்டேன்.
அவர்
சொன்னது:
"பல்
தேய்க்கும் போதோ அல்லது வேறு சமங்களிலோ ஈறுகளில்
இரத்தக் கசிவு ஏற்பட்டால்,
அதற்கு உப்பு சிறந்த நிவாரணம். அதனாலே, காலம்காலமாக, உப்புயை சூடு நீரில் கலந்து கொப்புளிக்க சொல்கிறோம்”.
உப்பு
உள்ள டூத் பேஸ்ட் பற்றி கேட்டபோது,
அவர், “டூத் பேஸ்ட்ல் பல உட்பொருட்கள் உள்ளன. பெரும்பாலான
டூத் பேஸ்ட்களின் உட்பொருட்கள் ஒரே மாதிரி யானது தான். உப்பும் அதில் ஒன்று. உப்பு
டூத் பேஸ்ட்ல் உப்பு கொஞ்சம் தூக்கலாக இருக்கும். அதே போல கொஞ்சம் தூக்கலாக வேம்பு
சேர்த்தால் அது வேம்பு டூத் பேஸ்ட்”,
“இந்த குணங்களை விளம்பரங்களில் மேலும் தூக்கலாக காண்பிக்கிறார்கள், அவ்வளவே”, என்று தெளிவாக்கினார்.
உப்பு
மட்டுமல்ல. இன்னும் பல பாரம்பரிய பொருட்கள் இப்படி விளம்பரங்களில் வந்துள்ளன.
"இண்டிகா, பத்து நிமிடத்தில்
முடிக்கு கலர் தரும்", என்கிறார் அக்ஷ்ய
குமார், தமிழில். அது பாதுகாப்பானதா என
கேட்டால் , "கவலை வேண்டாம், அதில்
நெல்லி காயும், செம்பருத்தியும் இருக்கு", என உறுதி அளிக்கிறார் அவர்.
மீராவின் பொடுகு போக்கும் ஷாம்பு விளம்பரம், "சின்ன
வெங்காயம், பெரிய வித்தியாசம்",
என செல்லமாக கோஷமிட்டு நம்மை ஈர்க்கிறது.
சதாசிவம்
சொன்னாற்போல இந்த அலை, பாரம்பரியத்தின் வெற்றியை காட்டுகிறதா?
ஆம், இல்லை என்பதற்கு
பதில், சற்று மாத்தி யோசிப்போம்.
பொருட்களின் தட்டுப்பாடு இல்லாத
நிலையில், வாடிக்கையாளர்களின் தேவையே பொருளாகிறது. மக்களுக்கு தேவை படாத பொருள்களை
திணிப்பதும் நடக்கத்தான் செய்கிறது. ஆனால் அவைகள் நிலைத்து
நிற்பது கடினம்.
வாடிக்கையாளர்களின்
தேவையை பூர்த்தி செய்தால் மட்டுமே தயாரிப்பாளர்களுக்கு விற்பனை கூடும்; லாபம் கிட்டும்.
மக்களின்
ரசனை, விருப்பு, வெறுப்பு, தேவைகள் மாறுகின்றன- தொழில்நுட்பம், சுற்றுப்புற
சூழல், சமூக மாற்றங்களும் அதில் பின்னி பிணைகின்றன.
குரு நாத் சொன்னாற்போல, மாற்றங்களை
நுணுக்கமாக கண்டறிந்து,
அவைகளுக்கு ஏற்றாற்போல பொருட்களையும் சேவைகளையும், உண்டாக்கி, சந்தையில்
பொசிசன் செய்து வெற்றி பெறுவதில் இருக்கு தயாரிப்பாளர்களின் சூட்சுமம்.
புதிய
/ மாற்றி அமைக்க பட்ட பொருள் வாடிக்கையாளர்களுக்கு பிடிக்காமல் இருந்தால், விற்பனை ஊத்தி விடும். வாடிக்கையாளர் தேவையை சரியாக புரிந்து
கொள்ளாததே காரணமாக இருக்கலாம். பொருள், வாடிக்கையாளர்களுக்கு பிடித்து இருந்தால், விற்பனை கூடும்.
அப்படி
நடந்தால், வாடிக்கையாளர்களுக்கும் மகிழ்ச்சி; பொருள் தயாரிப்பாளர்களுக்கும்
மகிழ்ச்சி.
விளம்பரங்களை
பொறுத்தமட்டில், வாடிக்கையாளர்களை கவர பொருட்களின் பயன்கள் மிகை படுத்தி காட்டப்படுகின்றன என்பதென்னவோ
உண்மைதான்.
மிகை
கவிதைக்கு எழில் கூட்டும்;
விளம்பரத்துக்கும் தான், அளவோடு இருக்கும்
பட்சத்தில் - சாப்பாட்டில் உப்பை போல.
ஞானம், ‘உப்பின் ஞானம்!'
- ராகி
©
💌
பெருநிறுவன மற்றும் பன்னாட்டு நிறுவன விளம்பரங்களே இன்று நம் வாழ்க்கையை பெரிய அளவில் அக்கிரமித்துள்ளது. இது வாழ்க்கைக்கு நல்லதா இல்லையா என தெரியவில்லை. ஆனால் விளம்பரங்களின் படைப்பாற்றலை பாராட்டியே ஆகவேண்டும்.
ReplyDelete